Skip to main content

விநாயகர் (சதுர்த்தி) ஸ்பெஷல்...

இந்தக் கட்டுரையில்...

விநாயகரை வழிபட எளிய மந்திரம்?

எந்த நட்சத்திரக் காரர்கள் எப்படி வழிபட வேண்டும்?

நினைத்ததை அடைய எவ்வாறு கணபதி ஹோமம் செய்ய வேண்டும் ? 

முக்கியமான மெகா கணபதிகள் பற்றி சிறு தகவல். 


விநாயகர் சதுர்த்தி என்றாலே, நாம் அருகில் உள்ள பல விநாயகர் கோவிலுக்கு செல்வது வழக்கம். 
வித விதமான அலங்காரங்களில் ஆனை முகத்தானை பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு அழகு தான்...
ஒரு சில முக்கியமான விநாயகர்  கோவில்கள் பற்றி இங்கு காண்போம். 
          
மெகா கணபதிகள்:
1. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்.
2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்.
3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்.
4. திருச்செட்டாங்குடி வாதாபி கணபதி.
5. செதலபதி ஆதி விநாயகர்.
1 . பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்:
பிள்ளையார் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிள்ளையார்பட்டிதான். மருதங்குடி, திருவீங்கைக்குடி, ஈக்காட்டூர் என்றெல்லாம் அழைக்கப் பட்ட ஊர், பிள்ளையார் என்று 'ஜீங்'கென்று அமர்ந்தாரோ அன்று முதல் 'பிள்ளையார்-பட்டி' ஆகிவிட்டது. 'வாதாபி கணபதி'நம் ஊருக்கு வந்த கதை ஞாபகம் இருக்கிறதா? அதன் பிறகு நரசிம்ம வர்ம பல்லவன், தென்னாட்டை ஒரு சுற்றுலா அடித்தபோது, காரைக்குடி பக்கத்தில் இருந்த அழகான மலை கண்ணில் பட்டது. அவனால் அந்த மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டவர்தான் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர். இவரிடம் எதுவும் வேண்டிக் கொள்ளக்கூட வேண்டாம். அவரைச் சும்மா பார்த்தாலே போதும், உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகும். எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனத் தெளிவு தானாய் வந்துவிடும். இவர் வலம்புரி விநாயகர் எல்லா இடத்திலும் நான்கு கரங்களால் நான்கு திக்கையும் ஆட்சி செய்பவர், இங்கே இரண்டே திருக்கரங்களால் விண்ணையும், மண்ணையும் தன் ஆட்சிக்குள் கொண்டு வந்துவிடுகிறார். ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், அர்த்தபத்ம ஆசனத்தில் வலக்கரத்தில் கொழுக்கட்டையோடு, இடக்கையை இடையில் தாங்கி, பெருமிதமாய் பக்தர்களுக்கு அபயமளிக்கிறார். காரைக்குடி-திருப்பத்தூர் சாலையில் உள்ளது, பிள்ளையார்பட்டி பிள்ளையார் கோவில்.
2. திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார்:
 

பிள்ளையார் அன்பே உருவானவர், கருணைக் கடல், கேட்டதைத் தருபவர் என்பதெல்லாம் நமக்குத் தெரியும். ஆனால், இது என்ன பொல்லாப் பிள்ளையார்? நம் வீட்டுக் குழந்தை அதிசயமாக எதையாவது செய்துவிட்டால், "பொல்லாத பிள்ளையப்பா"என்று கொஞ்சுவதில்லையா?அதுபோல் குழந்தை ஒருவனுடன் இந்தப் பிள்ளையார் சரிசமமாய் நின்று, குழந்தை சொன்னதையெல்லாம் கேட்டதால் 'பொல்லாத பிள்ளையார்'என்று அழைக்கப்படுகிறார். தவிர, பொல்லாத - பொள்ளாத - என்றால் உளியால் செதுக்கப்படாத என்று அர்த்தம் இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாக தானே தோன்றியவர், ஆதலாலும் பொல்லாத பிள்ளையார் என்று அழைக்கலாம். எல்லா ஊரிலும் பெரும் தொப்பையுடன் இருக்கும் பிள்ளையார், இங்கே ஒட்டிய வயிறுடன் காட்சியளிப்பது அதிசயமான ஒன்று. தமிழுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஒடியாடி உழைத்ததால் இப்படி ஆகிவிட்டாரோ என்னவோ?
அது என்ன ஊரின் பெயர் திருநாரையூர்?
மிருகண்டு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தபோது காந்தவர்மன் என்பவன் அதற்கு இடையூறு செய்தான். கோபம் கொண்ட முனிவர், அவனை 'நாரை'யாக மாறும்படி சாபமிட்டு விட்டார். அவன் சாப விமோசனம் கேட்டு கதறியழுதபோது, சௌந்தரேஸ்வரரை தினமும் காசி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யுமாறு முனிவர் கூறினார். அதுபோலவே செய்தது நாரை, ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து நீர் கொண்டு வரும்போது பெரும் மழை ஏற்பட்டது. அதனால், பறக்க முடியாமல் நாரை தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாக விழுந்தன. (அந்த இடம் சிறகிழந்த நல்லூர்) . சிறகுகள் இல்லாத நிலையில் நாரை தவழ்ந்து வந்து, சிவனை வழிபட்டு மோட்சம் பெற்றது. அதனால் அந்த ஊர் 'திருநாரையூர்' என்று அழைக்கப்படுகிறது. சிதம்பரத்திற்குத் தென்மேற்கே 20 கி.மீ தொலைவில், காட்டுமன்னார்குடி பாதையில் உள்ளது பொல்லாப் பிள்ளையார் கோயில்.
3. திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார்:
     

தேவேந்திரனால் பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட வெள்ளைப் பிள்ளையாரை நீங்கள் பார்க்க வேண்டுமா?
அந்த வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசிக்க திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ஆலயத்திற்கு போவோமா?
பிள்ளையார் வெள்ளையாக இருப்பதால், நானும் அப்படியிருக்கிறேன் என்று சொல்லுவது போல் வெள்ளைக் கோபுரம் நம்மை வரவேற்கிறது. உள்ளே சென்றால், சுவேத விக்னேஸ்வரர் எனப்படும் வெள்ளைப் பிள்ளையாரைச் சந்திக்கலாம். சிறிய வடிவம் தான் என்றாலும், தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டவராயிற்றே! தேவர்களுக்கு அமுதம் கிடைக்க வழிதந்தவர் ஆயிற்றே! வெள்ளைப் பிள்ளையாரைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போல் தோன்றும். அத்தனை தெய்வீகம்! கடல் நுரையால் செய்யப்பட்டதால், பிள்ளையார் தீண்டாத திருமேனி யாரும் தொடுவதில்லை, பச்சை கற்பூரம் மட்டும் சாத்துவார்கள். அதைத் தாண்டிச் சென்றால், பெரிய நாயகி அம்மன் சன்னதியையும், அஷ்டபுஜ மகாகாளியையும் தரிசிக்கலாம். பெரிய கோவில், அமைதியுடனும், அழகாகவும் காட்சியளிப்பதைக் காண கண்கோடி வேண்டும். பிள்ளையார் சதுர்த்தி அன்று, அல்லது எப்போது முடிகிறதோ அப்போது திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையாரைத் தரிசித்து விட்டு வாருங்கள்!அமிர்தமாக இருக்கும்.
தஞ்சை மாவட்டம் சுவாமி மலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவலஞ்சுழி திருத்தலம்.

4. திருச்செங்காட்டங்குடி வாதாபி பிள்ளையார்:
 

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான், கஜமுகாசுரனை அழித்த ஊர் இது. அந்த அசுரனின் ரத்தம் படிந்து, இந்த ஊரே செங்காடாக மாறியதால் செங்காட்டாங்குடி என்ற பெயர் உருவானது. ஆறாம் நூற்றாண்டுக்க முன்பிருந்தே இந்தக் கோயில் வழிபடப் பட்டிருக்கிறது. முதலாம் ராஜராஜன் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சிறுத் தொண்டரான பரஞ்ஜோதி, பல்லவ மன்னனின் சேனாதிபதியாக வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து, வெற்றி வாகை சூடியபோது கொண்டு வந்த வாதாபி கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது இங்கேதான். பல்லவர் கால தெய்வீகக் கலைச் செல்வங்களான நவதாண்டவ மூர்த்திகளையும், துவார பாலகர்களையும் நீங்கள் காணவேண்டுமென்றால் இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். இறைவன் உத்திராபதீஸ்வரர், சிறுத் தொண்டருக்கு அருள் புரிந்த பைரவ வேடத்திலேயே காட்சி தருகிறார். அந்த சிலையைப் பார்க்கவே வித்தியாசமாயிருக்கும்.
நாகை மாவட்டம் நன்னிலத்திருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சிருச்செங்காட்டாங்குடி திருத்தலம்.
5. செதலபதி ஆதி விநாயகர்:


 

இத்தலத்து நாயகனின் பெயர் முக்தீஸ்வரர். இவரை வழிபட்டால் முக்தி நிச்சயம் என்கிறார்கள். செதலபதி ஆலயத்தின் மற்றொரு சிறப்பு, கோயில் வாசலில் வீற்றிருக்கும் ஆதி விநாயகர் என்பதால் மனித உருவத்தில் காட்சியளிக்கிறார். முருகப் பெருமானுக்கு அவரைப் போன்றே ஒரு அண்ணா இருந்தால் எத்தனை அழகாக இருப்பாரோ, அத்தனை அழகாகக் காட்சியளிக்கிறார் ஆதி விநாயகர். குரு பகவான் தட்சணாமூர்த்தியும் இங்கே வித்தியாசமாக இருக்கிறார். காலால் அசுரனை மிதித்தபடி, தன் இரண்டு பக்கம் அணில்கள் இருக்க, சனகாதி முனிவர்கள் நால்வரும் அருகில் தவம் செய்யக் காட்சியளிக்கிறார் குரு. இன்றும் பாவங்களை நீக்கிச் சித்திகளை அளிக்கும் தலமாக விளங்கி வருகிறது. மயிலாடுதுறை - திருவாரூர் பாதையில், பூந்தோட்டத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

கணபதி ஹோமம் - பலன்கள் :
         
முழு முதற்கடவுளான கணபதி தெய்வங்களிலேயே சிறந்தவர். எதிலும் முதலில் பூஜிக்க வேண்டியவர். வழிபாட்டு முறையில், கணபதி ஹோமம் மிகச் சிறந்தது.  இது, கணபதி உபநிஷத்தில் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது.
யோ மோதக ஸஹஸ்ரேண யஜதே, 
ஸவாஞ்சித பலவமாப் நோதி 

ஆயிரம் கொழுக்கட்டைகள் ஹோமம் செய்தால் நினைத்ததை எல்லாம் அடையலாம். 
நெல் பொரியால் ஹோமம் செய்தால் புகழ் பெறுவான். 
எளிதில் கிடைக்கும் அருகம்புல்லால் ஹோமம் செய்தால் துயரங்களிலிருந்து விடுபடுவான். 

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு, அவை : 
மோதகம் என்னும் கொழுக்கட்டை, அவல், நெல்பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத்தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இவை தவிர அருகம்புல், நெய், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம், இவைகளையும் ஹோம நிவேதனமாகச் செய்யலாம். எட்டுப் பேரைக் கொண்டு ஹோமம் செய்தால் சூரியனுக்கு ஒப்பான ஒளியைப் பெறுவான். 

சந்திரனில் நான்காம் பிறையை பார்க்கக் கூடாது, பழிகள் ஏற்படும். கிருஷ்ணன் ஒருமுறை நான்காம் பிறையைப் பார்த்துவிட்டதாலேயே ஸ்யமந்தக மணியை அபகரித்துக் கொண்ட பழி ஏற்பட்டது. அதை போக்கிக் கொள்ள கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் பகலில் ஒன்றும் சாப்பிடாமலிருந்து மாலையில் விநாயகரை பூஜித்து பழி நீங்கப் பெற்றார் என்று பாகவதம் கூறுகிறது. 

பிரும்மாண்ட புராணம், லலிதோபாக்யானம் என்னும் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது...
தடை செய்யும் யந்திரத்தை சக்தி ஸைன்யங்கள் நடுவில் அரக்கர்கள் போட்டுவிட்டனர். அம்பிகையின் படையினர் செயலற்றுவிட்டனர். உடன் அம்பிகை, முக்கண்ணனைப் பார்த்த மாத்திரத்தில், யானைமுகத்தோன் தோன்றி தடையந்திரத்தை முறித்தெறிந்து அம்மாள் படைகளுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்தார் என்றிருக்கிறது. 

கணபதி ஹோமம், மிகச் சிறிய முறையிலும் பெரிய அளவிலும் செய்யலாம். அவரவர் சக்திக்கேற்றபடி செய்வதை கணபதி அன்புடன் ஏற்றுக்கொண்டு அருள் புரிகிறார். அவருக்கு "த்வைமாதுரர்"என்ற பெயர் உண்டு. உமாதேவியும், முக்கண்ணனின் முடியிலுள்ள கங்கையும் ஆக இரண்டு பேருமே அவர் தாயார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. கணபதி ஹோம முறை, கணபதி உபநிஷத்திலும் மற்றும் "வாஞ்சாகல்பதா"என்ற ஒரு பெரிய ஹோம முறையிலும் விரிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. கணபதி ஹோமம் செய்வதால், தடைகள் நீங்கி மேன்மை பெறலாம்.

            
எந்த நட்சத்திர காரர்கள், விநாயகரை  எப்படி அலங்கரித்து வழிபட பலன் கிடைக்கும் ?
அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அருகம்புல் மாலை.
பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.
ரோகினி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
மிருகசீரிஷம் - கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அருகம்புல்  மாலை.
திருவாதிரை - தங்கக் கிரீடம், அருகம்புல்  மாலை.
புனர்பூசம் - சந்தன அலங்காரம், அருகம்புல்  மாலை.
பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.

ஆயில்யம் - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.

மகம் - சந்தன அலங்காரம், அருகம்புல்  மாலை.

பூரம் - வெள்ளிக்கலசம், தங்கக் கிரீடம் அருகம்புல் மாலை.
உத்திரம் - திருநீறு அலங்காரம், அருகம்புல் மாலை.
ஹஸ்தம் - சந்தன அலங்காரம், அருகம்புல் மாலை.
சித்திரை - வெள்ளி கவசம், அருகம்புல்  மாலை.
சுவாதி - தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை.
விசாகம்- திருநீறு அலங்காரம்.
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், தங்கக் கிரீடம், அருகம்புல் மாலை, ரோஜா மாலை.
கேட்டை - தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அருகம்புல்  மாலை.
மூலம் - சந்தன அலங்காரம், அருகம்புல்  மாலை.
பூராடம்- தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம், அருகம்புல்  மாலை.
உத்திராடம்- அருகம்புல்  மாலை.
திருவோணம்- சுவர்ணம், அருகம்புல்  மாலை.
அவிட்டம் - மலர் அலங்காரம், வெள்ளிக் கவசம்.
சதயம் - குங்கும அலங்காரம், வெள்ளிக் கவசம்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம், அன்னம், அருகம்புல் மாலை.
உத்திரட்டாதி- ரோஜா மாலை அலங்காரம்.
ரேவதி- வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம், அருகம்புல் மாலை.

விநாயகரை வழிபட பதினாறு மந்திரங்கள்:
ஒம் என்ற சிறப்பான பிரணவத்திற்கு கணபதியே தலைவர். விநாயகரை குறிப்பாக பதினாறு மந்திரங்களைச் சொல்லி வழிபடுதல் சிறப்பு. அவை:
ஒம் சுமுகாய நம:
ஒம் ஏக தந்தாய நம:
ஒம் கபிலாய நம:
ஒம் கஜகர்ணிகாய நம:
ஒம் விகடாய நம:
ஒம் விக்னராஜாய நம:
ஒம் கணாதிபாய நம:
ஒம் தூமகேதுவே நம:
ஒம் கணாத்யக்ஷ£ய நம:
ஒம் பாலசந்த்ராய நம:
ஒம் கஜாநநாய நம:
ஒம் வக்ரதுண்டாய நம:
ஒம் சூர்ப்பகர்ணாய நம:
ஒம் ஹேரம்பாய நம:
ஒம் ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ ...

விநாயகப் பெருமானை இந்தப் பதினாறு மந்திரங்களால் வழிபட்டால் விநாயகப்பெருமானது அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.


இவ்வாறு,  விக்னங்களை அகற்றும் விநாயகரை வழிபட்டு  நாம் நல்வழி பெறுவோம். 










தகவல் உதவி: Thanks to :  காஞ்சி மடம். 

ஓம் நம ஷிவாய... ஹரி ஓம்...

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி...
ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி.

Comments

  1. Greetings, Asia's only one Temple Manimortheeswapuram SriUchishta Ganapathi, where Sri GANAPATHY along with Neelavani samethar.Only one in Asia.
    S.Ravchandran chennai

    ReplyDelete
  2. அருமையான பதிவு. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்

    ReplyDelete
  3. அருமையான பதிவு. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்

    ReplyDelete
  4. அருமையான பதிவு. உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறோம்

    ReplyDelete
  5. மகம் மற்றும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு எவ்வாறு வழிபட வேண்டும் என்று போடவில்லை

    ReplyDelete
    Replies
    1. நமஸ்காரம். விடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்பொழுது, சேர்த்து பதிவிட்டு விட்டோம். நன்றி ...

      Delete
  6. எந்த நட்சத்திரக்காரர்கள் சிவனை எப்படி அலங்கரித்து வழிபட பலன் கிடைக்கும்

    ReplyDelete
  7. எந்த நட்சத்திரக்காரர்கள் சிவனை எப்படி அலங்கரித்து வழிபட பலன் கிடைக்கும்

    ReplyDelete
  8. அருமையான விளக்கம். நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment