Skip to main content

பத்து தலைமுறை பாவம் போக்கும் பாசாங்குச ஏகாதசி...

Protected by Copyscape
பாபாங்குசா ஏகாதசி (அ) பாசாங்குச ஏகாதசி 

நாம் நமது முந்தைய பல பதிவுகளில் தெரிவித்தது போல், உபவாஸங்களில் ஏகாதசி விரதம் என்பது மிக, மிக முக்கியமானதும் மற்றும் ஹிந்துக்களாகிய அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விரதமும் கூட. 

அஸ்வினா (October / November)  மாதத்தில்  சுக்லபட்சத்தில்  வரக்கூடிய ஏகாதசியே "பாபாங்குசா  (அ) பாசங்குசா ஏகாதசி" என்று அழைக்கப் படுகின்றது. 


ஒவ்வொரு ஏகாதசியின் பெருமைகளையும், அதன் புண்ணியங்களையும் விவரிக்கும் "பிரம்ம வைவர்த்த புராணத்தில்" இருந்து பாபாங்குசா (அ) பாசங்குசா" ஏகாதசிக்கு உண்டான மகிமையை பார்ப்போம்...


ஸ்ரீ கிருஷ்ணருக்கும், மஹாராஜா யுதிஷ்டிரருக்கும் இடையில் நடைபெறும் சம்பாஷணையில், யுதிஷ்டிரர், அஸ்வினா (அக்டோபர் / நவம்பர்) மாதத்தில் சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) வரக்கூடிய ஏகாதசி பெயர் என்ன மற்றும் அதன் மகிமை என்ன என்று விளக்கமாக கூறும் படி ஸ்ரீ கிருஷ்ணரிடம் வேண்டுகிறார்..

ஸ்ரீ கிருஷ்ணர், யுதிர்ஷ்டிர மஹாராஜாவிற்கு எடுத்துரைத்த விளக்கங்களை நாம் இங்கே நமது "ஒரு துளி ஆன்மீகம்" குழு அன்பர்களுக்காக  தொகுத்துள்ளோம் ...


ஓ, யுதிஷ்டிரா, இந்த பூலோக வாழ்வில் ஒருவர் அடைய நினைக்கும் அனைத்து செல்வ வளங்களையும் அவர்களுக்கு அளித்து, மரணத்திற்கு பின் அவர்களுக்கு முக்தியை அளிக்கவல்லது இந்த பாசாங்குச ஏகாதசி விரதம். ஒருவர் பல நாட்கள் புலன்கள் அனைத்தையும் அடக்கி தவம் இருந்து அதன் மூலம் என்ன பலன் பெறுவாரோ அதனை இந்த பாசாங்குச ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் பெற முடியும்.

ஒருவர், தெரிந்தோ, தெரியாமலோ மிக மோசமான பாவங்கள் செய்திருப்பினும் செய்த பாவத்தை உணர்ந்து மனம் வருந்தி, பகவான் விஷ்ணுவிடம் மனமுருகி வேண்டி பின்னர் மனம் திருந்தி, இந்த பாசாங்குச ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் அவரது பாவத்தையும் நீக்கி அவருக்கும் முக்தியை அளிக்கவல்லது இந்த பாசாங்குச ஏகாதசி விரதம்.

ஒருவர் பல புண்ய ஷேத்திரங்கள் சென்று புனித நீராடி பெறுகின்ற புண்யத்தினை, இந்த பாசாங்குச விரதம் இருந்து, அன்றைய தினம் ராமா, விஷ்ணு, மாதவா, மதுஸூதனா, கிருஷ்ணா என்று நாம ஜெபம் செய்வதன் மூலம் பெற முடியும்.  அப்படி செய்பவர்கள், அவர்களது மரணத்திற்குப் பின்  எமலோகம் செல்லாமல் நேரடியாக விஷ்ணுவின் பாத கமலத்தை அடைவர்.

மேலும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகையில்,

வைஷ்ணவத்தை நிந்தனை செய்யக்கூடிய சைவர்களும், சைவத்தை நிந்தனை செய்யக்கூடிய வைஷ்ணவர்களும், இருவருமே கண்டிப்பாக நரகத்தினை  அடைவர். அதனை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மேலும், அஸ்வமேத யாகம், ராஜசூய யாகம் ஆகிய மிகப்பெரிய யாகங்களை செய்து பெறக்கூடிய பலன்களை இந்த ஏகாதசி விரதத்தினை கடைபிடிப்பதன் மூலம் எளிதாக அடையலாம்.

ஒரு பத்தினிப்பெண், எப்படி  எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் கணவனை விட்டுக்கொடுக்காமல், கணவனை விட்டு அகலாமல் இருப்பாளோ, அதுபோல ஒருவரது பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்களின் பலன், கர்மாவாக, அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்பேற்பட்ட கொடும் பாவங்கள் கூட இந்த பாசாங்குச ஏகாதசி விரதம் இருப்பதன் மூலம் அகன்று விடும்.

இதன் மூலம், இகபர வாழ்வில் அவருக்கு தேவையான பொன், பொருள், மனை,  உணவு தானியங்கள் மற்றும் அழகான குடும்பம் என அனைத்தும் அமையும். அதன் பின்னர், அவர் காசி, கயா மற்றும் புஷ்கரம் போன்ற புண்ய நதிகளில் நீராடி எந்த அளவு புண்யத்தினை பெறுவாரோ  அதே அளவு புண்யத்தினைப்பெற்று பகவான் ஸ்ரீ ஹரியின் பாதார விந்தங்களை அடைவர்.

இப்படிப்பட்ட பாசாங்குச ஏகாதசி தினத்தில் முழு மன நம்பிக்கையுடன் பகல் முழுவதும் உபவாசம் இருந்து அதன்பின்னர் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து பகவான் ஸ்ரீ ஹரி நாம ஜெபம் செய்வதன் மூலம்,  அவரது தந்தை வழியில் 10 தலைமுறையினர்  செய்த பாவங்களையும், தாய் வழியில் 10 தலைமுறையினர்  செய்த பாவங்களையும், தனது மனைவி (அல்லது) கணவர்  வழியில் 10 தலைமுறை முன்னோர்கள் செய்த பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்க கூடிய வல்லமையை தர வல்லது.

இந்த விரதத்தினை 6 வயதிற்கு மேல் உள்ள சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை அனைவரும் கடைப்பிடிக்கலாம்.  மேலும்

விரத்துத்துடன் அன்றைய தினம் தானம் வழங்குவதும் முக்கியத்துவம் பெறுகின்றது. அன்று பொன், தான்யம் விளையும் பூமி, பசுக்கள், காலணி,  குடை, தண்ணீர் அல்லது எள் என அவரவர் சக்திக்கேற்ப முடிந்த அளவு தானம் வழங்கினால் மிகப்பெரிய புண்யத்தினைப்  பெறுவர்.  அவரவர் சக்திக்கேற்ப ஏதாவது ஒரு சிறு தானத்தினை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு முழு மனதுடனும், முழு நம்பிக்கையுடனும் விரதம் இருந்து தானமும் அளித்தவர்கள், இகபர வாழ்வில் சகல செல்வ வளங்களையும் பெற்று செழிப்போடு வாழ்வர். மேலும் அவர்களது மரணத்திற்கு பின், ஸ்ரீ ஹரியின் ஆசீர்வாதமாக அவர்கள் யமலோகம் செல்லாமல், மஞ்சள் நிற ஆடை அணிந்து, மலர் மாலைகள் அணிந்து கருடன் மேல் அமர்ந்து நேரடியாக விஷ்ணுவின் வைகுண்டம் சென்றடைவர்.

கடந்த பிறவியில், ஏதோ ஒரு வகையில் பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பொதுக்குளங்களை ஏற்படுத்தியவர்கள், நீர்நிலைகளை உருவாக்கியவர்கள், பாதசாரிகள் ஓய்வு எடுப்பதற்கு அறை கட்டி கொடுத்தவர்கள், அன்னச்சத்திரம் மூலமோ அல்லது ஏதோ ஒரு வகையில் அன்னதானம் செய்தவர்கள், கோவில்கள் கட்டியவர்கள்   மற்றும் பல புண்ணிய காரியங்களை தொடர்ந்து செய்தவர்கள் தான், இந்தப் பிறவியில் நோய்களில் இருந்தும் விடுபட்டும், இக வாழ்விற்கு தேவையான பொருள்களை பெற்றும் ஆரோக்கியமாகவும்,  வளமான வாழ்வையும் பெற்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு  கூட இந்தப்பிறவியில் என்ன பாவ புண்ணியங்கள் செய்து வருகின்றார்கள்  என்பதைப்பொறுத்தே அடுத்த பிறவி அமையும். ஆனால், எவரொருவர் இந்தப்பிறவியில் பாசாங்குச ஏகாதசி விரதம் இருக்கின்றாரோ அவர் நேரடியாக ஸ்ரீ ஹரியின் பாதார விந்தங்களை அடைய முடியும்.

இவ்வாறு, ஸ்ரீ கிருஷ்ணர், மஹாராஜா யுதிஷ்டிரரிடம் "பாபாங்குசா ஏகாதசி" விரத மகிமையை பற்றி எடுத்து கூறினார்.


மேலும், இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்களும், இந்த புண்ய கதையை கேட்டவர்களும், பிறருக்கு எடுத்து சொல்பவர்களும் மிகுந்த புண்யத்தை அடைவார்கள், என்று "ப்ரம்ம வைவர்த்த புராணம்" எடுத்துரைக்கின்றது...

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த பிறவியின்றி இருக்கவும்,  'பாபாங்குச ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை: 

  • வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.) 
  • வாய்ப்பு இருப்பவர்கள் பழங்கள், பழச்சாறு மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். 
  • வாய்ப்பு இருப்பவர்கள், அவரவர் இல்லங்களிலேயே பெருமாள் படத்திற்கு முன்பாக நெய் விளக்கேற்றி, துளசி சாற்றி வழிபடலாம். 
  • இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    
விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.  

Editors Note:

(....இந்த நேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு பதிவு செய்ய நினைக்கிறோம்...
நமது 'தாமிரா தர்ம ரக்ஷண ஸபா' மூலமாக கலியுகத்திற்கு ஏற்ற வகையில் நமது குழு உறுப்பினர்களுக்கு இப்போதைய தண்டோரா மூலம், { Social Media like Whatsapp, Telegram, Facebook  etc, etc...}ஒவ்வொரு  ஏகாதசிக்கும்  முதல் நாள் தசமி திதி அன்று 
  'ஏகாதசி விரதம்' பற்றி ஒரு நினைவூட்டலை நாம் செய்து வருகின்றோம்...)  

'ஒரு துளி ஆன்மீகம்' whatsapp குழுவில் இணைய இங்கு கிளிக் செய்யவும்.....  (MH1) 

ஓம் நமோ நாராயணாய...
ஓம் நமோ வெங்கடேசாய...

பின் குறிப்பு:
நாம் முன்பே பலமுறை கூறியுள்ளது போல், உபவாஸம் இருப்பது என்பது உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது என்ற போதிலும், தற்போதைய "கலி யுகத்தில்" இது அவரவர் தனிப்பட்ட உடல் நலனை பொறுத்தது ஆகும்.

வயோதிகர்கள், நோய் வாய் பட்டவர்கள், உடல் நிலை ஒத்துழைக்காதவர்கள் ஏகாதசி விரத பலனை அடைய, ஏகாதசி அன்று ஒரு நாள் மட்டும் அரிசி உணவை தவிர்த்து வேறு உணவுகளை (அவல், அல்லது பழங்கள் போன்ற) அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்  கொண்டு,  பகவான் நாமாவை ஜெபித்து கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு ஏகாதசி விரத மகிமையை மற்ற அன்பர்களுக்கும்   தெரியப்படுத்தலாம்.  (இன்றைய COVID-19 சூழ்நிலையில் கோவிலுக்கு செல்லாமல் இருக்கும் இடத்தில் இருந்து ப்ரார்த்தனை செய்தலே உத்தமம் / கட்டாயமும் கூட...) 

ஹரி ஓம்...ஓம் நமோ பகவதே வாசுதேவாய... 

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 


Comments

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status