Skip to main content

தை அமாவாசை மகத்துவம் என்ன ? பத்ர தீபம் எதற்காக ?

'தை அமாவாசை' மற்றும் 'பத்ர தீப' விளக்கம்:

ஆடி அமாவாசை போன்று தை அமாவாசையும் மிகவும் முக்கியமானது என்று அனைவருக்குமே தெரிந்திருக்கும். அன்று நமது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது வழக்கம். 


ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள அத்தியாவசியத்தை நாம் புரிந்து கொண்டோமானால் இதனை சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும். 

'சிரார்த்தம்' என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது.

இந்த நேரத்தில், காஞ்சி ஸ்ரீ. மஹா பெரியவா, உரையில் இருந்து ஒரு சில பகுதிகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனை படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்....


எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ???

மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம் (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலே விருந்து என்பது இதுதான். இது மனுஷ யக்ஞம்.

பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிராமண ஜாதியினர் மட்டும் செய்வது.


எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம். அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம்.


பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச் செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.


வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார் என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய், தந்தையர்களுக்கும், மூதாதையார்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்தவை அவை.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்றதெல்லாம்  செய்து தர வேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.


அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை 'சீர்திருத்தக்காரர்களும்' (Editor Note: தி. க. அல்லது நாஸ்திகர்கள்)  ஒப்புக்கொள்கிறார்கள். 

ஆனால், அவர்கள் மரணமடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது.

எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பித்ருக்கள்  எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க, இங்கே உள்ள வஸ்து (பொருள்கள்) அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா என்று  சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார்? அவர் வாய்விட்டுக் கேட்கிறார். உங்களில் பலருக்கும் மனசுக்குள்  இப்படி சந்தேகம் இருக்கலாம். உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒருவர் தன் மகனை பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியாடரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும், மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபால் ஆபிசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் போய் சேர்ந்துவிடும். அனுப்பியாகிவிட்டது என்றார்.

குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமலிருப்பதையும் பார்த்த அப்பாக்காரர் அப்பாவியாக,  என் பணம் இங்கேதானே இருக்கிறது, அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே, அது எப்படிப் போய்ச் சேரும் என்று கேட்டார்.?


அது போய்ச் சேர்ந்துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். கட்டுக் கட கட என்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான். சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லொட், லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய் சேரும், என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது. ஆனால் பணம் வந்து சேர்ந்து விட்டது என்று மகனிடம் இருந்து தகவல் வந்தது.


தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள். பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால் வைக்கோலாக்கிப் போட்டுவிடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால் புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேஷ்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் சிரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள அப்பா நேரில் வர வேண்டியதில்லை.


தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லை அல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது. இங்கே ரூபாயைக் காட்டிலும் வெளி தேசத்தில் டாலராகவோ, பவுனாகவோ மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது. ஆனால், நம் ஊரில் டாலரையோ பவுனையோ மாற்ற முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக்கொள்ளுவார்கள். அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.

[Editor Note: இப்போது உதாரணத்திற்கு, Western Union, UAE Exchange, Money Gram  போன்றவற்றை குறிப்பிடலாம் ]


பித்ருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் டோஸ்ட் (Toast) சாப்பிடுகிறேன், என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வேறு ஒருவன் பேரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி அப்படிச் செய்கிறார்கள்.

சிரார்த்தம்  என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படியாகத்தான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், இப்படித்தான் அட்ரஸ் எழுத வேண்டும், அதை தபால் பெட்டியில் போடவேண்டும் என்று செய்வானேன் ? அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன் என்று சொல்லலாமா. ?


காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றிச் செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது.


Editor Note: இனிமேல் தர்ப்பணம் பண்ணக்கூடிய அனைவரும் அதன் பலன் உணர்ந்து பண்ணுவர் என்று நம்புகிறோம்...



திருநெல்வேலி பத்ர தீபம் (பத்தாயிரம்) / இலட்ச தீபம் : 
திருநெல்வேலியைக் காத்து அருள் புரிந்து கொண்டிருக்கும் 'சுவாமி நெல்லையப்பர்-காந்திமதியம்பாள்' திருக்கோவிலில் ஒவ்வொரு 'தை அமாவாசை' அன்றும் 10,000 விளக்குகள் ஏற்றப்படும். இதுவே பேச்சுவழக்கில் 'பத்தர தீபம்' (பத்தாயிரம் மருவி பத்ர)  என்றாகியது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை இலட்ச தீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 

நீத்தார் கடன்கள் என்று சொல்லப்படும் 'பித்ருகர்மா' சரிவர செய்யாதவர்கள் / குடும்ப சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதார காரணங்களாலோ பித்ரு கர்மா சரிவர செய்ய முடியாதவர்கள் பயன் பெற வேண்டி, இந்த பூஜை முறையானது  (பத்ர தீபம்), 'கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தர சுவாமிகள்' எனும் மகா சித்தரால் 1864ம் ஆண்டு முதல் தொடங்கி வைக்கப்பட்டது.   


1831-ம் ஆண்டு, திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கங்கைகொண்டானில்,  அப்பய்ய தீக்ஷிதர் பரம்பரையில் பிறந்து, பின்னர் கோடகநல்லூரில் தனது 'சன்யாச வாழ்க்கையை'த் தொடர்ந்து, தன் வாழ்நாளில்,  பல்வேறு உபதேசங்களையும் / அற்புதங்களையும் நிகழ்த்தியவர். 


1872-ம் ஆண்டு,  திருவையாறு பகுதியில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் ஏழு கோவில்களின் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து, அந்த ஏழு இடங்களிலும் அதே நேரம் இருந்து அற்புதம் புரிந்தவர்.  பின்னர்  1878ம் ஆண்டு ஸித்தியடைந்தார்.  (அவரைப்பற்றி தனியாக ஒரு பெரிய பதிவு எழுதும் அளவிற்கு தகவல்கள் உள்ளது...)
சுந்தர சுவாமிகள் காலத்திற்கு பிறகு அவதரித்த நமது 'மஹா பெரியவா', சுந்தர சுவாமிகளை பற்றி மிகவும் உயர்வாக கூறியுள்ளார்கள். 


'தை அமாவாசை' அன்று, இத் திருக்கோவிலுக்கு வந்து சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளை தரிசனம் செய்து 'பத்ர தீப' விழாவில்,  கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம், 'பித்ருகர்ம தோஷம்' விலகி குடும்ப வாழ்வு செழிக்கும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.  


பூவுலகில் மனிதர்களது இன்னல்கள் குறைய, சித்தர்களால், சில விஷயங்கள் அறிவுறுத்தப்படும். அதனை நாம் தான் நன்றாக புரிந்துகொண்டு பின்பற்றி நமது இன்னல்களில் இருந்து விடுபட வேண்டும். 


இந்த உற்சவத்தின் போது, இத்திருக்கோவில் மணிமண்டபத்தில் ஒரு 'தங்க விளக்கு' வெள்ளி பீடத்தில் வைத்தும், அதன் அருகில் இரண்டு 'வெள்ளி விளக்குகள்', மற்றும் அதனை சுற்றி எட்டு விளக்குகளும் ஏற்றப்படும். அதன் பின்பு மற்ற விளக்குகள் கோவிலின் அனைத்து பகுதிகளிலும் ஏற்றப்படும். 

'தங்க விளக்கு' தரிசனம் இதோ நமது ஒரு துளி ஆன்மீகம் குழுவினருக்காக ...

வாய்ப்பு இருப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறை கலந்து கொண்டு பித்ரு தோஷம் விலக ப்ரார்த்தனை செய்யலாம். 
சரி, திருநெல்வேலி அல்லது அதன் அருகில் இல்லாத வெளியூர் அன்பர்கள் என்ன செய்வது என்று கேட்பது புரிகிறது? 
அவ்வாறு உள்ளவர்கள், தை அமாவாசை அன்று செய்யக்கூடிய அன்னதானத்திற்கு மிகவும் பலன் அதிகம். அவரவருக்கு ஏற்ற வகையில், அந்தந்த ஊர்களில், எத்தனை நபர்களுக்கு முடியுமோ, அத்தனை நபர்களுக்கு (குறைந்த பட்சம் ஒரே ஒரு நபருக்காவது) அன்னதானம் செய்யலாம்.  அது மிகுந்த பலனைத் தரும்...தொடர்ந்து செய்வதன் மூலம் பிதுர்கர்ம தோஷ நிவர்த்தி ஆகும்... 
மேலும், தாய், தந்தையர் இருக்கக் கூடியவர்கள், தர்ப்பணம் செய்ய முடியாது / கூடாது. அவர்களும் இதே போன்று அன்னதானம் மட்டும் செய்தாலே போதுமானது, பெரும் புண்ணியம் கிடைக்கும்...

ஓம் ஷிவாய நமக !!! ஹரி ஓம் !!!
...உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...
நன்றி ...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா, 
திருநெல்வேலி... 

Comments

  1. திருநெல்வேலி யில் உள்ள என்னைப்போன்ற நபர்களும் அறியாத பத்ர தீப தகவல். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ... தாங்கள் தெரிந்து கொண்ட தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

      Delete
  2. Good and useful message to be performed Tharpanam Every month without fail but one thing I have doubt but God Gives some intolerable family problem to me even though iam performing PithrunTharpanam

    ReplyDelete
    Replies
    1. Very good sir. Everything is for some purpose only. Surely God will listen all your prayer and soon all will happen as Good.

      Delete

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status