Skip to main content

How to reduce Saturn's Negative Effect ?


சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....



வருகின்ற 19-12-2017 அன்று (வாக்ய பஞ்சாங்கப்படி) சனி பெயர்ச்சி நடைபெற உள்ளதை  நாம்  அனைவரும் அறிவோம்....இன்றைய   தினத்திற்குள்ளாக  நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 5 முதல் 6 வேறுபட்ட தொலைக்காட்சி மற்றும் மாத இதழ் பலன்களை கண்டிருப்போம் / படித்திருப்போம் ...

இதில்  சிறப்பான பலன் பெறக்கூடிய  ராசியினர் மிகவும் உற்சாகமாகவும், சுமாரான மற்றும் மோசமான பலன்களை படித்தோர் சற்று உற்சாகம் குறைந்தும் இருப்பது இயல்பானது தான்...

ஏற்கனவே, பல்வேறு தொலைக்காட்சிகளும், மற்றும் செய்தி தாள்களும், மாத இதழ்களும் சனி பெயர்ச்சி பலன்களை விரிவாக அலசி விட்ட படியால் நாமும் அதற்குள் செல்ல விரும்பவில்லை ...

மாறாக, எல்லா சனி பெயர்ச்சிக்கும் பயன் தரக்கூடிய, மற்றும் சனி பகவானின் அருள் ஆசியினை பெற நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விவரித்தால் நம்மில் பலருக்கு உபயோகமாக இருக்கும் என்று நமது "ஒரு துளி ஆன்மீகம் " வாசகர்களின் / குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இங்கு சில விஷயங்கள் பகிரப்பட்டுள்ளது... 

இவை யாவும் பல்வேறு ஆன்மீக ஆராய்ச்சியாளர்களிடமும் இருந்து பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட அற்புதமான தகவல்கள்  ஆகும்....

வாசகர்கள் இதனை படித்து பயன் பெற எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவானாக ....

ஓம் சிவாய நமஹ ....


சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க சித்தர் ஒருவர் கூறிய எளிய பரிகாரம்   : பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.

அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். 

ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.

பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். 

* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
* கோமாதா பூஜை செய்யலாம்.
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வயதிற்குள் இடைபட்ட காலத்தில் வீடுகட்டுதல் கூடாது.
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.

சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். 

ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.

சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.

அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.

உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். 

னி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.

குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி, முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.

அனைத்திற்கும் மேலாக, "அவனின்றி அணுவும் அசையாது" என்பதற்கேற்ப "சிவன் இன்றி எதுவும் அசையாது".... ஆம், எல்லா நாளும் சிவ வழிபாடும், சிவன் நாமமும் மட்டுமே, நம்மை அனைத்து கோள்களின்   பிடியில் இருந்தும் விடுவிக்கும் ஒரே வழியாகும்...  

ஓம் சிவாய நமஹ !!!

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status