Skip to main content

மஹா சிவ ராத்திரி முழு தகவல் தொகுப்பு...

மஹா சிவ ராத்திரி - ஒரு முழு தகவல் தொகுப்பு:

மஹா சிவ ராத்திரி:

மெய்யன்பர்களுக்கு வணக்கம்சிவ ராத்திரி பற்றிய ஒரு முழு தகவல் தொகுப்பாக இந்த கட்டுரை இருப்பதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் (முழுவதும் படித்து விட்டு)... நன்றி...



சிவனுக்கு உரிய விரதங்கள்:

சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டு விரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறதுசோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேஸ்வர விரதம், மஹா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம்ரிஷப விரதம் என்பன அவையாகும்.

மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் மஹா சிவராத்திரி என அனைவராலும் கொண்டாடப்படுகிற நாளாகும்.

மஹா சிவ ராத்திரி எப்படி கணக்கிடப்படுகிறது ?

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மஹா சிவ ராத்திரி ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில், மாசி மாத கிருஷ்ண பட் சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மஹா சிவராத்திரி எனப்படும்

உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மஹா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

 மஹா சிவ ராத்திரி சிறப்புகள்:

  • வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்) அஸ்திரத்தை பெற்றது இந்த நாளில் தான்.
  • கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்தது  இந்த நாளில் தான்.
  • பகீரதன் மிகக் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது  இந்த நாளில் தான்.
  • தன் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்தது  இந்த நாளில் தான்.
  • பார்வதி தேவி தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் கூறுகின்றது.

புராண விளக்கங்கள்:

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுபவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

பூஜை முறை:

சிவராத்திரியின் போது இரவு நான்கு பொழுதாக (சாமம்) பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு பொழுதுகளிலும்  சிவலிங்கத்துக்கு சிறப்பு  அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அப்போது  எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புராணங்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் கால பூஜை :

இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம் கொண்ட கலவை) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாவது கால பூஜை :

இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணெய் தீபத்துடன், இரண்டாவது கால பூஜை "யஜுர்வேத" பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும். 

மூன்றாவது கால பூஜை :

இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணெய் தீபத்துடன் "ஸாமவேத " பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது.

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்னவென்றால், இதை லிங்கோத்பவ காலம் என்று கூறுவர். இந்த காலத்தில் தான் சிவபெருமானின் அடி மற்றும் முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மஹா விஷ்ணு வராக அவதராம் எடுத்து பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது.

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காவது கால பூஜை:

இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்டை  பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து "அதர்வண வேத" பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

மஹா சிவ ராத்திரி விரத முறை :
விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.
அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

நடைமுறையில் ஒவ்வொரு கோவிலிலும், சிறிது கால வித்தியாசம் பின்பற்றப்படுவதால் இங்கே நான்கு காலங்களுக்கு உண்டான நேரத்தை குறிப்பிட வில்லை. 

லிங்கோத்பவ காலம் இரவு 11:30 முதல் 12:15 வரை என்று கணக்கிட்டுகொள்ளலாம் 

Editor's Note: வயதானவர்கள் மற்றும் உடல் நலம் குன்றியவர்கள் மேலும் பல்வேறு அலுவல்கள் காரணமாக மஹா சிவராத்திரி விரதம் இருக்க முடியாதவர்கள், தனது உடலை வருத்தி விரதம் இருக்க வேண்டும் என்பதல்ல... அதற்க்கு மாறாக, மஹா சிவ ராத்திரி விரதத்தின் தாத்பரியத்தை  (Fasting & Awakening) உணர்ந்து  கொண்டுமுழு சரணாகதி அடைந்து,

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச

                           த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்

                           ஏகபில்வம் சிவார்ப்பணம் ...   

என்னும் மந்திரத்தை கூறி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்கள் அழிந்து விடும்

வாய்ப்பு இருப்பின்சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

நமது மனம் போனபடி அலையாமல், புலன்களை கட்டுபடுத்துவற்கே விரதம் தேவைப்படுகிறது. மேலும், மஹா சிவ ராத்திரி அன்று, வழக்கமான தாமச குணத்தில் இருந்து விடுபட்டு (தூக்க நிலை) விழிப்பு நிலை அடையவே  நாம் உறங்காமல் இருந்து இறை நிலையை உணர முயற்சிக்கிறோம்

வெறுமனே, உறங்காமல் இருத்தல் என்று அதற்கு பொருள் அல்ல... (சினிமா படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடி உறங்காமல் இருப்பது, வெட்டி அரட்டை அடித்து நேரத்தை கடத்துவது என்பது விரதத்தின் எந்த வகையிலும் சேர்த்தி கிடையாது

அன்று நாம் உணர முற்பட வேண்டியது மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலை என்பதே ஆகும்

இது கலி யுகம்: இந்த யுகத்தில் அனைத்துமே "நாம ஸ்மரணை" மூலமே அடைய முடியும் என்பது பல யுகங்களுக்கு முன்பே விதிக்கப்பட்டது... ஆகவே சிவன் நாமம் ஜபித்து (சிவாய நம, சிவாய நம, சிவாய நம...)

வாழ்வில் வளம் பல பெறுவோம்...

 

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status