Skip to main content

மஹாளய பட்சத்தில் யார் யார் என்ன செய்ய வேண்டும் ? மஹாளய அமாவாசையின் முழு பலனையும் அடைவது எப்படி ?

...மஹாளய அமாவாசை... 
ஒரு துளி ஆன்மீக அன்பர்களுக்கு நமஸ்காரம். 

"மஹாளய பட்சம்" என்றால் பித்ருக்களுக்கு முக்கியமான காலம் என்றுபொருள். அந்த மஹாளய பட்ச காலத்தில் விச்வேதேவாதி தேவதைகள் பித்ருலோகத்தில் இல்லாமல் பூலோகத்தில் எத்தனை ஜீவராசிகள் இருக்குமோ அத்தனை ஜீவராசிகளுக்கும், நமக்கும் அருள் பாலிப்பதற்காக இங்கே (பூலோகத்தில்) சஞ்சரிப்பதாக அறநூல்கள் கூறுகின்றன. 




"ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம் நீங்க, குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில் தொடர்ந்து காரணமின்றி வரும் சண்டை, சச்சரவுகள் நீங்க, பணம் மற்றும் போதிய சொத்துக்கள் கை நிறைய இருந்தும் தொடர்ந்து தாமதமாகும் திருமண வாழ்க்கை, குழந்தைப்பேறின்மை ஆகிய  பிரச்சனைகள் தீர,  சம்பாதிக்கும் அனைத்து பணமும் குடும்ப மருத்துவ செலவுகளுக்காக விரயமாவது என்ற நிலை மாற" இப்படி பல்வேறு பிரச்னைகளுக்கும் மூலக் காரணமாக உள்ள  "பித்ரு கடன்களை" தீர்ப்பதற்கு / குறைப்பதற்கு  ஒரு அற்புதமான வாய்ப்பு தான் இந்த "மஹாளய பட்சம்" ஆகும்...


ஆகவே, அந்த மஹாளய பட்ச காலத்தில் (15 நாட்கள்) அவசியம் 
பித்ரு தேவதைகளுக்காக  தர்ப்பணம், ஹிரண்ய ஸ்ரார்த்தம், அன்ன ஸ்ரார்த்தம் இம்மூன்றில்  எதையேனும் ஒன்றை விடாமல் செய்ய வேண்டும்.
ஜலம், எள்ளு, அட்சதை முதலியவைகளை எல்லாம் கலந்து பித்ருதேவதைகளை குறித்து விடுவதே தர்ப்பணம். நாம் ஜலம் விடுவதன் மூலம் தேவதைகளுக்கு சென்று அவர்கள் மூலமாக நம்முடைய முன்னோர்களுக்கும்  அவர்களுக்கு வேண்டிய திருப்தியை அளிப்பதனால் தர்ப்பணம் சிரத்தையோடும், விஸ்வாசத்தோடும்  பித்ருக்களுக்கு செய்ய  வேண்டியிருப்பதனாலும் "ஸ்ரார்த்தம்" என்று பெயர். 

சரி... தாய், தந்தையர்கள் உள்ள இளைஞர்கள், பெண்கள் என்ன செய்ய வேண்டும் ??? முடிந்தவரை இந்த மஹாளய பட்ச 15 நாள்களும் அல்லது குறைந்த பட்சம் "மஹாளய அமாவாசை" அன்று ஒரு நாள் மட்டுமாவது உங்களால் முடிந்த நபர்களுக்கு "அன்னதானம்" செய்யுங்கள்.... (குறைந்தது ஒரே ஒரு நபருக்கு மட்டுமாவது...)

இந்த பதினைந்து நாட்களில் உங்களுக்கு என்றைக்கெல்லாம் வசதிப்படுமோ 


இந்த பதினைந்து நாட்களில் உங்களுக்கு என்றைக்கெல்லாம் வசதிப்படுமோ 
அன்றெல்லாம்  சாலையோரம் அல்லது கோவில்   வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு குடிக்க நீர், நீர்மோர் அல்லது பானகம் அளிப்பது,  மிகவும் வயதானவர்களுக்கு மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு மருந்து மாத்திரை, (Medicines) காலணி (Chappal) மற்றும் கைத்தடி (Walking Stick) வாங்கி கொடுப்பது சாலச்சிறந்தது.  உங்கள் முழு மனதோடு மிகச்சிறிய அளவிலேனும் செய்தால் கூட போதுமானது... உங்கள் குடும்பத்திற்கே மிக நல்ல பலன் கிடைக்கும்.   

மேலும்... பசு மாட்டிற்கு அகத்திக் கீரை வாங்கிக் கொடுப்பது,  மீன்களுக்கு பொரி இடுவது, காகத்திற்கு உணவிடுவது ஆகியவையும்  அபரிமிதமான  பலனைத் தரும்...


தட்சணை மூலமாகவும், பொருள் மூலமாகவும் கொடுப்பதனால் ஹிரண்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லப்படுகிறது. "ஹிரண்யம்" என்றால் தங்கம்.  தங்க நாணயத்தை தட்சணையாகக்  கொடுப்பது அந்தக் காலத்து வழக்கம்.  அதனால் அப்படி பெயர் வந்தது. 

ஆகவே, மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் (இது ஹிந்துக்களாகிய அனைவருக்கும் பொருந்தக்கூடிய விஷயம், பிராமணர்களுக்கு மட்டும் அல்ல) தேவ, ரிஷி மற்றும் பித்ரு கடன்களிலிருந்து விடுபடுவதற்கு, மூன்று  பேர்களுக்கும் உள்ள  உரிய கர்மாக்களை செய்ய வேண்டும்.
அதிலும் பித்ரு தேவதைகளின் அனுக்ரஹம் மிகவும் முக்கியமானதால் பித்ரு காலங்களிலும், பித்ரு தோஷங்களிலிருந்தும் விடுபடுவதற்கு மிக அவசியமான தர்ப்பணம், ஸ்ரார்த்தம் போன்றவைகளை மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டும். இதனை மஹாளய பட்சம் முழுவதும் (15 நாட்கள்) செய்ய முடியாதவர்கள் கூட இந்த "மஹாளய அமாவாசை" அன்று ஒரு நாள் கண்டிப்பாக செய்ய வேண்டும். 
தமிழ்நாட்டை பொறுத்தவரை, மிகவும் புண்ய ஸ்தலங்களான ராமேஸ்வரம், திருப்புல்லாணி, திருச்சி காவிரிக்கரை, திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரை, பாபநாசம், திருவாரூர்  ஆகிய பல்வேறு இடங்களிலும்  அன்றைய தினம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்... (இயல்பான சூழல் நிலவும் பொழுது...) அவரவர் தங்கள் இருப்பிடங்களுக்கு ஏற்ப கடற்கரை, நதிக்கரை அல்லது தங்கள் இல்லங்களில் செய்து கொள்ளலாம்... 

ஆனால், பலரும் இதனை ஒரு கடமை என்றே செய்வர். (அதிக விருப்பம் இல்லாவிட்டாலும்). இதற்கு பின்னால் உள்ள விளக்கத்தை நாம் புரிந்து கொண்டோம் என்றால், இதனை ஏன் சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பது புரியும். 

ஸ்ரார்த்தம் என்னும் வார்த்தையே சிரத்தை என்பதில் இருந்து தான் வந்துள்ளது.

இந்த நேரத்தில், காஞ்சி மஹா பெரியவா அவர்களின் உரையில் இருந்து ஒரு சில பகுதிகள் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அதனை அப்படியே இங்கு கொடுத்துள்ளோம். இதனைப் படித்த பின்பு தர்ப்பணம் ஏன் செய்ய வேண்டும் என்பதையும், அதனை எவ்வளவு சிரத்தையுடன் செய்ய வேண்டும் என்பதனையும் மிக, மிகத் தெளிவாக நாம் உணர முடியும்....


எள்ளும் தண்ணீரும் எங்கே போயின ???

மநுஷ்யராகப் பிறந்தவர்கள் தங்களுடைய முன்னோர்கள், தெய்வம் இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். இதுவே பித்ருக்கடன், தேவ காரியம் என்பவை. நம்முடைய சக ஜீவர்களுக்கு நம்மாலானதைச் செய்ய வேண்டும். ஆதித்யம் (ஒர் அதிதிக்காவது உணவு படைப்பது) அல்லது திருக்குறளிலே விருந்து என்பது இதுதான். இது மனுஷ யக்ஞம்.

பிரம்ம யக்ஞம் என்று இன்னொன்று. பிரம்மம் என்றால் பல அர்த்தம். இந்த இடத்தில் வேதம் என்று அர்த்தம். வேதம் ஒதுவதும், ஒதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. இது எல்லோரும் செய்வதல்ல. எல்லோருக்காகவும் பிராமண ஜாதியினர் மட்டும் செய்வது.


எல்லோரும் செய்வதற்காக ஏற்பட்ட இன்னொரு கர்மம் பூத யக்ஞம். அதாவது மனுஷ்ய ஜீவனாக இல்லாத ஜீவராசிகளுக்குக்கூட நம் அன்பைத் தெரிவித்து உணவூட்டுகின்ற காரியம்.


பித்ரு யக்ஞம், தேவ யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் இவற்றை எல்லோரும் ஏதோ ஒரு ரூபத்தில் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றோம். வைதிகத் தர்மப்படி அவரவரும் தங்களுக்கான தொழிலைச்செய்து ஈசுவரார்ப்பணம் பண்ணுவதே அவரவருக்கும் பிரம்ம யக்ஞம் என்று சொல்லலாம்.


வேத நெறியில் சொல்லப்பட்டதையே ஏறக்குறைய திருவள்ளுவரும்,

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

தென்புலத்தார் என்பது பித்ருக்கள். பித்ருக்களான தாய், தந்தையர்களுக்கும், மூதாதையார்களுக்கும் நமது கடமைகளை எல்லோரும் அவசியம் செய்தாக வேண்டும். மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ என்று வேத மாதாவும், இங்கே நம் எல்லோருக்கும் வேத ஸாரத்தையே லகுவாகப் பிழிந்து கொடுத்தவை அவை.

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " என்றும் சொல்லுகிறார்கள். தாய் தந்தையர் ஜீவிய வந்தர்களாக இருக்கையில், அவர்களிடம் பணிவுடன் நடந்து கொண்டு, அவர்களுக்கு நம்மால் இயன்றதெல்லாம்  செய்து தரவேண்டும். தாய் தந்தையர் நமக்காக ஆதியில் செய்துள்ள தியாகங்களுக்கு நாம் பிரதியே செய்ய முடியாது. அவர்களது மனம் கோணாமல் அவர்களை வைத்துக் காக்க வேண்டும்.


அவர்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பிற்பாடும், அவர்களுக்காக சாஸ்திரப் பிரகாரம் தர்ப்பணம், சிரார்த்தம் இவற்றை அனைவரும் தவறாமல் செய்ய வேண்டும். பெற்றோர் உயிரோடு இருக்கும் வரையில் அவர்களை வைத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை  சீர்திருத்தக்காரர்களும்  ஒப்புக்கொள்கிறார்கள்...(Editor's Note: "சீர்திருத்தக் காரர்கள்" என்று குறிப்பிடுவது  "நாஸ்திகர்களை") 

ஆனால், அவர்கள் மரணமடைந்த பின் பித்ரு காரியம் செய்வது அவர்களுக்குப் பரிகாசமாக இருக்கிறது....

எள், தர்ப்பண ஜலம், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு எல்லாம் இங்கேயே இருக்கின்றன. அல்லது கண் முன்னாலேயே ஒருத்தன் எடுத்துப் போனான். அல்லது சாப்பிட்டுவிட்டான். பித்ருக்கள்  எங்கேயோ மறு ஜன்மா எடுத்து விட்டார்கள் என்று நீரே சொல்கிறீர். அப்படியிருக்க, இங்கே உள்ள வஸ்து (பொருள்கள்) அங்கே போய் அவர்களை சேருகிறது என்பது பைத்தியக்காரத்தனம் அல்லவா என்று  சீர்த்திருத்தக்காரர் கேட்கிறார்? அவர் வாய்விட்டுக் கேட்கிறார். உங்களில் பலருக்கும் மனசுக்குள்  இப்படி சந்தேகம் இருக்கலாம். உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

ஒருவர் தன் மகனை பட்டணத்தில் படிக்க வைத்திருந்தார். அவர் பரிட்சைக்குப் பணம் கட்டவேண்டியிருக்கிறது. அதுவும் மறுநாள் கட்ட வேண்டியிருக்கிறது. உடனே அப்பாவுக்கு தந்தி மணியார்டரில் பணம் அனுப்பு என்று எழுதினான். அப்பாவுக்குத் தந்தியும், மணியார்டரும் தனித்தனியாகத் தெரியும். பிள்ளையோ தந்தி மணியார்டர் அனுப்பும்படி எழுதியிருக்கிறான். அப்பா தபால் ஆபிசுக்கு போனார். ரூபாயைக் கொடுத்துவிட்டுத் தந்தி மணியார்டர் பண்ண வேண்டும் என்றார். அவர், தபாலாபீஸ் குமாஸ்தா ரூபாயில் ஒட்டை பண்ணித் தந்திக் கம்பியில் கட்டி அனுப்புவார் என்று எண்ணினார். ஆனால் பணம் வாங்கிக் கொண்ட குமாஸ்தா ரசீது கொடுத்துவிட்டு, சரி, உம்முடைய பணம் போய் சேர்ந்துவிடும், அனுப்பியாகிவிட்டது என்றார்...

குமாஸ்தா பணத்தை பெட்டியில் போட்டதையும், ஒட்டை பண்ணிக் கம்பியில் கோர்க்காமல் இருப்பதையும் பார்த்த அப்பாக்காரர் அப்பாவியாக, என் பணம் இங்கேதானே இருக்கிறது, அதில் ஒட்டை ஒன்றும் போட்டு அனுப்பவில்லையே, அது எப்படிப் போய்ச் சேரும் ? என்று கேட்டார்.


அது போய்ச் சேர்ந்துவிடும் என்று மறுபடியும் குமாஸ்தா சொன்னார். கட்டுக் கட,கட என்று தந்தியும் அடித்தார். ஏதோ லொட்டு லொட்டென்று சப்தம் பண்ணுகிறான், சேர்ந்துவிடும் என்று சொல்கிறான். ருபாய் இங்கே இருக்கிறது. லொட், லொட்டென்று கட்டையை இங்கே அடித்தால் அங்கே எப்படிப் போய் சேரும், என்று அப்பாவுக்குச் சந்தேகம் வந்து விட்டது. ஆனால் பணம் வந்து சேர்ந்து விட்டது என்று மகனிடம் இருந்து தகவல் வந்தது.


தர்ப்பணம் முதலிய பண்ணுவதும் அந்த மாதிரியே ஆகும். நாம் எதைக் கொடுத்தாலும் அதற்கென சட்டப்படி கொடுக்க வேண்டும். சாஸ்திரம் என்கிற சட்டம் விதித்தபடி நாம் கொடுப்பதைத் தெரிந்து கொள்கிற பிதுர் தேவதைகள் அது யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்குச் சேர்த்து விடுவார்கள்.

பிதிருக்கள் மாடாகப் பிறந்திருந்தால், வைக்கோலாக்கிப் போட்டு விடுவார்கள். குதிரையாகப் பிறந்திருந்தால், புல்லாக்கிப் போட்டிருப்பார்கள். பிதுர் தேவதைகளுக்கு பரமேஷ்வரன் இப்படி உத்தரவு பண்ணி, இதற்கான சக்தியும் தந்திருக்கிறார். ஆகையால் ஸ்ரார்த்தத்தன்று கொடுப்பதைப் பெற்றுக் கொள்ள மறைந்த அப்பாவோ அல்லது அம்மாவோ நேரில் வர வேண்டியதில்லை.


தந்தி மணியார்டர் செய்தவனுடைய பணமோ வாங்கிக் கொள்ளுகிறவனிடம் நேராகப் போவதில்லை அல்லவா? மணியார்டர் பெறுகிறவன் வேறு தேசத்தில் இருந்தால் அங்கே நம் ரூபாய் நோட்டு செல்லவே செல்லாது.

இப்பொழுது, இங்கே ரூபாயைக் கொடுத்தால், வெளி தேசத்தில் டாலராகவோ (U.S.Dollars), பவுண்டாகவோ (U.K Pounds) மாற்றித்தரவும் ஏற்பாடு இருக்கிறது.

(Editor's Note: இப்போது உதாரணத்திற்கு,  Western Union, UAE Exchange, Money Gram  போன்றவற்றை குறிப்பிடலாம்)
ஆனால், நம் ஊரில் டாலராகவோ (U.S.Dollars),   பவுண்டாகவோ (U.K Pounds) செலவழிக்க முடியாது. இங்கே செல்லுபடியாகிற ரூபாயைத்தான் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

அப்படியே சாஸ்திரப் பிரகாரம் விதிக்கப்பட்ட எள், தண்ணீர், வாழைக்காய் இதுகளை பிதுர்களுக்கு ஏற்ற உணவாக மாற்றித் தரப்படும்.


பிதிருக்களிடம் நமக்குள்ள நன்றி மனோபாவமும், சாஸ்திரத்தில் நமக்குள்ள சிரத்தையுமே முக்கியம். இன்னொருவனுடைய ஆரோக்கியத்துக்காக நான் டோஸ்ட் சாப்பிடுகிறேன், என்று பார்ட்டியில் வெள்ளைக்காரர்களும் வேறு ஒருவன் பேரைச் சொல்லிக் கொண்டு தாங்களே போஜனம் செய்கிறார்கள். தங்களுடைய மனோபாவத்தின் சக்தியால் இன்னொருவனுக்கு ஆரோக்கியம் உண்டாகும் என்று நம்பி அப்படிச் செய்கிறார்கள்.

ஸ்ரார்த்தம்  என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது தான் அர்த்தம். சிரத்தை நமக்கு முக்கியம். ஒரு காரியம் என்று பண்ண ஆரம்பித்தால் அதற்குரிய சட்டப்படியாகத்தான் பண்ண வேண்டும். லெட்டர் எழுதினால், இப்படித்தான் அட்ரஸ் எழுத வேண்டும், அதை தபால் பெட்டியில் போடவேண்டும் என்று செய்வானேன் ? அதைவிட நல்ல பெட்டி செய்து அதில் போடுவேன் என்று சொல்லலாமா. ?


காரியமில்லாத மனோபாவமாக இருக்கிற வரையில் அன்பு, பக்தி, ஞானம் இவற்றைக் கட்டுப்பாடின்றிச் செலுத்தலாம். காரியம் என்று செய்கையில் அதற்காக ஏற்பட்ட விதியை விடவே கூடாது.


Editor's Note: இனிமேல் தர்ப்பணம் பண்ணக்கூடிய அனைவரும் அதன் தெளிவான பொருளையும் அதன் பலனையும் உணர்ந்து பண்ணுவர் என்று நம்புகிறோம்...


ஹரி ஓம்... ஓம் ஷிவாய நமக !!!

உங்கள் கருத்துக்களை கீழ் உள்ள பகுதியில் (Post a Comments) பதிவிடலாம்...

இதனையும் படிக்கலாமே ...
தற்பொழுது புற்றுநோய் (Cancer) எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன ? அது வருவது எப்படி? அதனை மிக எளிதாகத்  தடுப்பது எப்படி ? 


ஆலயமும், ஆஸ்பத்திரியும் - எது முக்கியம் - மஹா பெரியவா பார்வையில் ?

நன்றி...


ஒரு துளி ஆன்மீக ஸேவையில்,
தாமிரா தர்ம ரக்ஷண ஸபா,
திருநெல்வேலி.

#Mahalaya_Amavasai
#Mahalaya_Patcham
#OruThuliAanmeegam
#ThaamiraaDharmaRakshanaSabha


Protected by Copyscape

Comments

  1. Replies
    1. மஹாளய அமாவாசையின் மகாத்மியம் பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி

      Delete
  2. Explained very clearly abt d importance of mahalya patcham Everyone should realise ad do it without fail

    ReplyDelete
  3. Explained very clearly abt d importance of mahalya patcham Everyone should realise ad do it without fail

    ReplyDelete
  4. Explained abt d importance of mahalya patcham is really good

    ReplyDelete
  5. Hari Ohm! Clear information. All the very Best! Thanks & regards! "Lakshmipathi's" Thirumayilai.

    ReplyDelete
  6. உங்கள் பதிவுகள் அறுமை நன்றி

    ReplyDelete
  7. மிக்க நன்றி

    ReplyDelete

Post a Comment

அதிகம் வாசிக்கப்பட்டவை (Popular Posts)

திருப்புகழ் 'முத்தைத்தரு' பாடல் - பொருள் விளக்கம்...

முத்தைத்தரு பத்தித் திருநகை...  முருகப்பெருமான்  நேரிலேயே  வந்து  அருணகிரிநாதருக்கு    அடி   எடுத்துக் கொடுத்து,   அருணகிரிநாதர்  பாடிய   ப...

அதிமதுரம் மருத்துவ குணங்கள் - Athimadhuram

அதிமதுரம் மருத்துவ குணங்கள் :- ஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு மூலிகைகளும் பெற்றுள...
Protected by Copyscape
DMCA.com Protection Status